செட்டு போட்டு சிக்கலில் சிக்கிய செல்லூர் ராஜூ: மீனாட்சி கோயில் விவகாரத்தின் யம்மாடியோவ் பின்னணி! ஏஸியா நெட் தமிழ் Mileage article...
ஏஸியா நெட் தமிழ் இணையதளம் அன்று நுணுக்கமாக புலனாய்ந்து எழுதிய விவகாரம் ஒன்றை இன்று பல பத்திரிக்கைகள் வழிமொழிய துவங்கியிருக்கின்றன!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தினை தொடர்ந்து, மதுரை மண்ணின் மைந்தரான அமைச்சர் செல்லூர் ராஜூவின் அரசியல் வாழ்க்கைக்கு அஸ்தமனம் வரபோகிறது என்று அ.தி.மு.க.வினுள்ளேயே சில விஷமிகள் பீதி கிளப்பி விடுகிறார்கள் என்றும், இதை கேள்விப்பட்ட செல்லூரார் ’ஏத்தா மீனாட்சி நானேதும் குத்தங்கொற செஞ்ச்ப்புட்டேனா?’ என்று மனமுருகி புலம்புவதாக ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது ஏஸியாநெட் தமிழ் இணையதளம்.
இந்நிலையில் இந்த தகவல்கள் முன்னணி பத்திரிக்கைகளில் வலம் வர துவங்கியுள்ளன. அதாவது “அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த 28-ம் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இருவரையும் மதுரைக்கு அழைத்து, பாண்டி கோயிலில் தனது பேரன்களின் காதணி விழாவில் பங்கேற்க வைத்தார். மதுரையையே அதகளப்படுத்தியது இந்த விழா.
பாண்டி கோயிலில் கிடா வெட்டி சாமி கும்பிடப்படுவது வழக்கம். ஆனால் மீனாட்சியோ சைவ தெய்வம். பாண்டி கோயிலில் விழா நடத்திய செல்லூரார், மீனாட்சியம்மன் கோயில் போன்று அங்கே செட் போட்டு வைபவத்தை நடத்தியிருக்கிறார். இதனால் வெகுண்ட மீனாட்சி தனது கோபத்தை எரித்துக்காட்டியிருக்கிறாள்! என்று தகவல்கள் கிளம்பியுள்ளன.
இதில்தான் ஆடிப்போய் கிடக்கிறாராம் செல்லூர் ராஜு . மேலும் அன்று கோவலன் விஷயத்தில் மன்னன் தவறு செய்தபோது கண்ணகி மதுரையையே எரித்தாள். பாண்டிய மன்னனின் ஆட்சி பஸ்பமானது. அதேபோல் இன்று ஆட்சியாளர்களோ, மக்கள் வேதனைப்படும் வகையில் அரசு புரிகிறார்கள். மக்களின் வேதனையில் வெகுண்டிருக்கும் மீனாட்சி தனது கோபத்தை தீயின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளாள். பாண்டிய மன்னனின் ஆட்சிக்கு நேர்ந்த சரிவு கதிதான் இப்போதைய ஆட்சிக்கும்.” என்று கெளப்பியுள்ளனர் மறு புறத்தில்.
இது செல்லூர் ராஜூ உள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சரவையையும் அலற வைத்திருக்கிறது! என்கிறார்கள்.