நான் ‘செயல்’ அதிகாரி! அசால்டாய் பிரகடனம் செய்த கவர்னர்: ஏஸியாநெட் இணைய தளம் அன்றே சொன்னது, அப்படியே பலித்தது...
கடந்த ஒரு வாரத்தில் சசி - தினா அணி மற்றும் பழனி - பன்னீர் அணி என ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையும் கலங்க வைத்த சம்பவங்கள் இரண்டு. ஒன்று, சசி வகையறாவை வகுந்தெடுத்து நடந்த ரெய்டு. மற்றொன்று பழனியின் அமைச்சரவையை நடுங்க வைத்த கவர்னரின் ‘கோயமுத்தூர் ஆய்வுக் கூட்டம்.’
இதில் கோயமுத்தூரில் அம்மாவட்ட அரசு அதிகாரிகளை அழைத்து கவர்னர் ஆய்வு செய்ய இருக்கிறார் என்கிற தகவல் வெளியானதுமே, மளமளவென தரவுகளை சேகரிப்பதில் களமிறங்கியது ஏஸியாநெட் தமிழ் இணைய தளம். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தான் பதவியேற்றதும் ராஜ்பவனின் செலவுகளில் பாதிக்கும் மேல் அதிரடியாய் குறைத்தார். இயல்பிலேயே நேர்மையும், ஸ்ட்ரிக்ட் போக்கும் கலந்த குணமுடைய அவர் தமிழகத்தை ஒரு கலக்கு கலக்குவார் என்றும் எழுதியிருந்தோம்.
அ.தி.மு.க. அமைச்சரவையை ஆட வைக்கும் வகையில் கவர்னர் புரோஹித் செயல்பட துவங்கியிருப்பதோடு மக்கள் நல திட்டங்கள், மாநில வளர்ச்சி செயல்பாடுகளில் அவர் தலையிடுவார் என்பதை சுட்டிக்காட்டி சந்தோஷப்படும் தமிழக பா.ஜ.க. அவரை செல்லமாக ‘செயல் முதல்வர்’ என்று அழைக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
ஏஸியாநெட்டின் வாய்முகூர்த்தம் அப்படியே பலித்திருக்கிறது. கோயமுத்தூரில் அதிகாரிகளை கூட்டி ஆய்வு நடத்திய கவர்னர் பன்வாரிலால் ‘அரசின் திட்டங்களை எக்ஸிகியூட் (செயல்படுத்தும்) பண்ணும் கடமை எனக்கு இருக்கிறது. அந்த வகையில் உங்களையெல்லாம் சந்திக்கும் உரிமை எனக்கிருக்கிறது. பணியில் நேர்மையுடன், நேரந்தவறாமலும் செயல்படுங்கள்.” என்று பேசியிருக்கிறார்.
ஆக ‘செயல் முதல்வர்’ என்று கவர்னரை தமிழக பி.ஜே.பி.யினர் கொண்டாடுவதில் உண்மை இருக்கிறது என்பதை கவர்னரே தன் வார்த்தைகளின் மூலம் நிரூபித்துவிட்டார். இதனால் வெளிப்படையாகவே அவரை அப்படி அழைக்க துவங்கியிருக்கிறார்களாம் தமிழக பி.ஜே.பி.யின் தலைமை நிர்வாகிகள்.
கவர்னர் துணிந்து எனக்கு உரிமை இருக்கிறது, எனக்கு கடமை இருக்கிறது! என்று பேசியிருப்பதும், தமிழ்நாடு முழுக்கவே எல்லா மாவட்டங்களிலும் இதை தொடர்வேன் என்று அறிவித்திருப்பதும் ஆளும் அ.தி.மு.கவின் வயிற்றில் புளியந்தோப்பையே கரைத்திருக்கிறது.