ஆகஸ்ட் 14ம் தேதி சிறையிலிருந்து விடுதலையாகிறார் சசிகலா..? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகலாம் என்று பாஜக பிரமுகர் ஆசீர்வாதம் ஆச்சாரி தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1991-1996 காலக்கட்டத்தில் ஆட்சியில் இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், 2017ம் ஆண்டு, அந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும்போது, ஜெயலலிதா இறந்துவிட்டதால், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஆளுக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதாவிற்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது.
இதையடுத்து, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பிப்ரவரி 15ம் தேதி அடைக்கப்பட்டனர். சசிகலா சிறையிலடைக்கப்பட்ட பின்னர், தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் பல்வேறு அதிரடி மாற்றங்களும் பரபரப்பான சம்பவங்களும் அரங்கேறின. தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சி அடுத்த ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், சசிகலா சிறையிலிருந்து வெளிவந்ததும் அதிமுகவில் பல அதிரடி மாற்றங்களும், தமிழக அரசியலில் பரபரப்பான சம்பவங்களும் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சசிகலாவின் விடுதலை எப்போது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையே, பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான நரசிம்ம மூர்த்தி என்பவர், சசிகலாவின் ரிலீஸ் எப்போது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த சிறைத்துறை நிர்வாகம், சிறை கைதிகளின் விடுதலை என்பது, பல்வேறு சிறை விதிமுறைகளுக்குட்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே சசிகலா விடுதலையாகும் தேதியை திட்டவட்டமாக தெரிவிக்க முடியாது என தெரிவித்துவிட்டது.
இந்நிலையில், ஆசீர்வாதம் ஆச்சாரி தனது டுவிட்டர் பக்கத்தில், சசிகலா வரும் ஆகஸ்ட் 14ம் தேதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அடுத்தகட்ட தகவல்களுக்காக காத்திருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஆசீர்வாதம் ஆச்சாரியின் சசிகலா விடுதலை குறித்த டுவீட் பதிவு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.