ரிசல்ட்டுக்கு முன்பே பதவியேற்பு விழாவுக்கு நாள் குறித்த எடியூரப்பா.. தேர்தல் நாளன்றே ஸ்டேடியம் புக்கிங்!
தேர்தல் நடைபெற்ற நாளிலேயே 17ஆம் தேதி பதவியேற்பு விழா என நாள் குறித்த எடியூரப்பாவின் கனவு தற்போது நனவாகிவருகிறது.
2019 லோக் சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த தேர்தல் பார்க்கப்படுவதால் நாடே கர்நாடக தேர்தல் முடிவுகளை உற்று நோக்கி வருகிறது.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 இடங்களுக்கு கடந்த 12-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 72.4 வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தம் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் எண்ணற்ற வாக்காளர் அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்ட சர்ச்சையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது, அதே போல் ஜெயாநகர் தொகுதியில் பி.என்.விஜயகுமார் என்ற பாஜக வேட்பாளர் மரணமடைந்ததையடுத்து தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
பதாமி, சாமுண்டீஸ்வரி தொகுதிகளில் போட்டியிடுகிறார் சித்தராமய்யா பின்னடைவை சந்தித்துள்ளார்.
பெங்களுருவில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. வட கர்நாடகாவில் பல தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. சாமுண்டேஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தாரமையாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் எடியூரப்பா முன்னிலை வகித்து வருகிறார்.
பாஜகவின் எடியூரப்பா நாளைய மறுநாள் (17-ஆம் தேதி) பதவியேற்பு விழாவுக்காக கன்டீராவா ஸ்டேடியத்தை முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. தேர்தல் நடைபெற்ற நாளிலேயே 17ஆம் தேதி பதவியேற்பு விழா என நாள் குறித்தவர் எடியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது.