ஜெ.மரண விவகாரம் - விசாரணை வளையத்தில் சிக்கும் உதவியாளரும் சமையலரும்...!
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வரும் 21ம் தேதி ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், 22ம் தேதி சமையலர் சேகரும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. அதில் ஜெயலலிதாவின் நண்பர்கள், உறவினர்கள், என அனைத்து தரப்பினரிடமும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு பங்கு இருப்பதாக புகார் கொடுத்தது யார் என்று கூறினால் மட்டுமே தன்னால் சம்மனுக்கு பதில் தர முடியும் என நீதிபதி ஆறுமுகசாமியிடம் சசிகலா தரப்பு தெரிவித்தது.
இதையடுத்து அதற்கு விசாரணை ஆணைமும் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2,956 பக்க ஆவணங்களை சசிகலா தரப்பிடம் விசாரணை ஆணையம் சமர்ப்பித்துள்ளது. படித்துவிட்டு 15 நாட்களுக்குள் பிரமான பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு சசிகலாவுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் மீண்டும் கால அவகாசம் கேட்டு சசிகலா தரப்பு மனு அளிக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே சசிகலாவுக்கு 5 முறை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் முறையான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்றால் ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு எதிராக முடிவு எடுக்கப்படும் எனவும் கூறி விசாரணை ஆணையம் சசிகலா மனுவை தள்ளுபடி செய்திருந்தது.
இதைதொடர்ந்து சசிகலாதரப்பில் வழக்கறிஞர் அரவிந்தன் விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகானர். வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு பதிலாக அரவிந்தன் ஆஜராகி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வரும் 21ம் தேதி ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், 22ம் தேதி சமையலர் சேகரும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.