arumugasamy commission enquiry will be continue after jan 2 christmas leave

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஜன. 2 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப்பின் இதன் விசாரணை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. 
இதை அடுத்து, இன்றுடன் விசாரணையை தற்காலிகமாக ஆறுமுகசாமி ஆணையம் ஒத்தி வைத்துள்ளது. மேலும், ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் தனது விசாரணையை தொடங்கவுள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் டிசம்பர் 25ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், விசாரணைக்கான காலநீட்டிப்பு கேட்டு அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது.

இந்த விசாரணை ஆணையத்தில் இதுவரை 120 பேர் புகார் மனு அளித்துள்ளனர். 28 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அவற்றின் அடிப்படையில் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் ஆணையம் நேரடி விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 15க்கும் மேற்பட்டோர் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு தகவல்களை அளித்து வருகின்றனர். 

இந்நிலையில், சசிகலா, அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப ஆணையம் முடிவு செய்தபடி, அவர்களுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. அவர்களில் சசிகலா இன்னும் 15 நாளில் பதிலளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் பிரீத்தா ரெட்டி ஆகியோர் இன்னும் 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், விசாரணை ஆணையத்துக்கான கால அவகாசம் வரும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதிவரை தான் அரசு கொடுத்திருந்தது. அதற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப் பட வேண்டும். ஆனால், விசாரணை ஆணையம் தன் விசாரணையைத் துவங்கியதே மிகத் தாமதம்தான் என்பதால், விசாரணைக்கான கால அவகாசத்தை மேலும் மூன்று மாத காலத்துக்கு நீட்டித்துத் தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி கடிதம் எழுதினார். அவரது கடிதத்தை பரிசீலித்து இன்று அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது.