தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க ஏற்பாடு நடக்கிறது..!! காவல்துறை டிஜிபி தரப்பில் நீதிமன்றத்தில் தகவல்..!!
காவல்துறை தரப்பில் தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்ட வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டு வர தேவையான மசோதாவை தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவுடிகளை கடுப்படுத்துவது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் அமர்வு,
ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது. தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்க சென்ற போது உயிரிழந்த போலீஸ் சுப்ரமணியன் மரணம் குறித்து கட்சிகள் வாய் திறக்காதது ஏன்?
இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்படுவோர் குடும்பத்திற்கு அரசியல் கட்சிகள் உதவ வேண்டும். ரவுடிகள் இறக்க நேரிடும் போது காட்டப்படும் அக்கறையை போலீசார் மீது, மனித உரிமை ஆணையம் ஏன் காட்டுவதில்லை? ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். ரவுடிகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டி.ஜி.பி., 2 வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்ட வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் ரவுடிகளை புதிய சட்ட வரைவு மசோதா எப்போது சட்டமன்றத்தில் முன் வைக்கப்பட உள்ளது என்று பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.