மீட்கப்பட்ட நிலங்கள் மூலம் கோவில்களுக்கு வருமானம் வரும் வகையில் ஏற்பாடு.. அமைச்சர் சேகர் பாபு அடுத்த சிக்சர்.
புதிதாக கொண்டுவரும் திட்டங்கள் எந்த வகையிலும் அறநிலையத்துறையில் பணியாற்றி வருபவர்களை நிச்சயமாக பாதிக்காத வகையில் செயல்படுத்துவோம் என அவர் தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு அவர்கள் தலைமையில் துறைசார்ந்த அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்;
அனைத்து திருக்கோவில்களும் தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தி உள்ளோம். கோவில் நிலங்கலில் ஆக்கிரமிப்பு செய்து வாழ்ந்து வருபவர்களில் வாழ்வாதாரம் இல்லாதவர்களாக இருந்தால், குழுவாக அங்கு வசிப்பவர்களுக்கு அரசாங்கம் விதிமுறைகளின்படி அதே இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். அவர்களை வாடகை தாரர்களாக கருதப்பட்டு அவர்களிடம் வாடகை வசூலிக்கப்படும். 50- லட்சத்திற்கு மேல் வருமானம் வரும் கோயில்களை கண்காணிக்க சி.ஏ படித்தவர்களை அறநிலையத்துறை வேலைக்கு அமர்த்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்,
இதனால் அறநிலையத்துறையில் பணியாற்றி வரும் தணிக்கை ஆய்வாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனரா என கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வெளிப்படை தன்மையோடு வரவுசெலவு கணக்கு இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றும், புதிதாக கொண்டுவரும் திட்டங்கள் எந்த வகையிலும் அறநிலையத்துறையில் பணியாற்றி வருபவர்களை நிச்சயமாக பாதிக்காத வகையில் செயல்படுத்துவோம் என அவர் தெரிவித்தார்.
வணிக தளங்களில் இருப்பவர்களிடம் வாடகை நிலுவை இல்லாமல் வாங்கப்பட வேண்டும், குட முழுக்கு நடத்துவது தொடர்பாகவும் விளகியுள்ளோம்.விரைவில் முதலமைச்சர் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு நிதிகளை அறிவிக்க இருக்கிறார். மீட்கப்பட்ட நிலங்களை அந்தந்த திருக்கோயில்களுக்கு வருமானம் வரும் வகையில் வழிவகை செய்வோம். பராமரிப்பின்றி இருக்கக்கூடிய பழைய கட்டடங்களை உடனடியாக ஆய்வு செய்து அதனை விபத்து ஏற்படாத வகையில் சரி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.