அரியர் மாணவர்களுக்கு... அமைச்சர் அன்பழகன் விடுத்த முக்கிய தகவல்..!
யுஜிசி, ஏ.ஐ.சி.டி.இ வழிகாட்டுதலின் படியே அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தமிழக அரசுக்கு ஏ.ஐ.சி.டி.இ எந்த கடிதமும் எழுதவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழக கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப்பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் யுஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
அரியர் தேர்வு எழுவிருந்த மாணவர்களுக்கும் இறுதி பருவ தேர்வை தவிர மற்ற தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுவதாகவும் அரசு அறிவித்திருந்தது. தமிழக அரசின் அறிவிப்புக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள போதிலும், கல்வியாளர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, பொறியியல் படிப்பில் அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) மறுப்பு தெரிவித்து இமெயில் அனுப்பியதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் ஏ.ஐ.சி.டி.இ. எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, "தேர்வு எழுதாமல் மாணவர்களை எப்படி தேர்ச்சி அடைய வைக்க முடியும்" என்று ஏஐசிடிஇ நிர்வாகம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தது. இதனால் அரியர் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அரியர் தேர்ச்சி தொடர்பாக மாணவர்கள் பயப்பட வேண்டாம் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். செமஸ்டர் இறுதி தேர்வு தவிர பிற தேர்வுக்கு பணம் செலுத்திய அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். யுஜிசி, ஏ.ஐ.சி.டி.இ வழிகாட்டுதலின் படியே அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தமிழக அரசுக்கு ஏ.ஐ.சி.டி.இ எந்த கடிதமும் எழுதவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.