பாஜகவுக்கா ஓட்டுப்போடுகிறீர்கள்..? வடமாநிலத்தவர்கள் மீது மேடையிலேயே கடுப்பான திமுக அமைச்சர்..!
நாங்கள் உங்களை புறக்கணிக்க மாட்டோம். நீங்கள் எவ்வளவு புறக்கணித்தாலும் உங்களுக்காக போராட திமுக இருக்கிறது
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மஹாவீர் இண்டர்நேசனல் சென்னை ஃபுட் பேங்க் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி சென்னை துறைமுகம் பகுதியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசும்போது, திமுக ஆஅட்சியின் தயவால் வட இந்தியர்கள் தமிழகத்தில் நன்றாக சம்பாதிக்கிறார்கள்.
ஆனால் ஓட்டு மட்டும் பாஜகவுக்கு போடுகிறார்கள். 40 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நிலைமை இருந்ததோ, அந்த நிலைமை மாறி இன்று வட இந்திய நண்பர்கள் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில் இருக்கிறீர்கள். இதற்கு காரணம் திராவிடக்கட்சிகள் தமிழகத்தில் இருந்ததால் தான் நீங்கள் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறீர்கள். உங்களை வாழ வைத்தது, பொருளாதாரத்தில் நீங்கள் முன்னேறியதற்கு பாஜக காரணம் அல்ல. திராவிடக்கட்சிகள் தான் காரணம். நீங்கள் ஏதோ ஒரு மாயையில் தொடர்ந்து பாஜகவை ஆதரித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
வாக்கு சீட்டு இருந்தபோது மொத்தமாக வாக்குகளை கலந்து எண்ணுவார்கள். அப்போது எந்தப்பகுதியில் யாருக்கு வாக்கு விழுந்தது என்பது தெரியாது. இப்போதெல்லாம் கணினி வசதிகள் வந்து விட்டது. அந்த ஈவிஎம் மிஷினில் ஒரு பட்டனைத் தட்டினால் போதும் எவ்வளவு வாக்குகள் எந்தெந்த பகுதிகளில் விழுந்தன என்கிற விவரம் வந்து விடும். ஆனால் உங்களுக்காக உழைத்த நாடாளுமன்ற உறுப்பினர், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு உங்களது வாக்குகள் கிடைக்கவில்லை.
அதனால் நாங்கள் உங்களை புறக்கணிக்க மாட்டோம். நீங்கள் எவ்வளவு புறக்கணித்தாலும் உங்களுக்காக போராட திமுக இருக்கிறது’’ என அவர் தெரிவித்தார். சட்டசபை தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட சேகர்பாபு 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களாக பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் தான் முன்னிலையில் இருந்தார். அதனை சுட்டிக்காடியே சேகர்பாபு இவ்வாறு பேசியுள்ளார்.