எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டதில் ஒரு பெண் கூட இல்லாதது குறித்து பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். 

கர்நாடகா, மத்தியபிரதேசம், ஹரியாணா, திரிபுரா உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, தாவர் சந்த் கெலாட் (கர்நாடகா), பண்டாரு தத்தாத்ரேயா (ஹரியாணா), ஹரிபாபு கம்பாம்பட்டி (மிசோராம்), ராஜேந்திரன் விஸ்வநாத் (ஹிமாச்சலப்பிரதேசம்), மங்குபாய் சஹான்பாய் படேல் (மத்தியபிரதேசம்), ஸ்ரீதரன் பிள்ளை (கோவா), சத்யதேவ் நாராயணன் (திரிபுரா), ரமேஷ் பயஸ் (ஜார்கண்ட்) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், புதிய ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகி குஷ்பு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “மேதகு குடியரசு தலைவரிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். எந்தவொரு மாநிலத்திலும் இந்த பதவியில் அமர தகுதியான ஒரு பெண்ணை கூட கண்டுபிடிக்க முடியவில்லையா? ஏன் இந்தப் பாகுபாடு? உங்களிடமிருந்து வரும் இந்த செயல் வலியையும் காயத்தையும் ஏற்படுத்துகிறது. நான் உங்களை புண்படுத்தவில்லை என்று நம்புகிறேன்” என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred