“ஜெ. மரணத்தில் மர்மம் இருக்கிறது…” - ஓ.பி.எஸ்.ஸிடம் அப்பல்லோ டாக்டர் ரகசிய தகவல்
அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்தவர், டாக்டர் ராமசீதா. கடந்த சில நாட்களுக்கு முன், ஆர்.கே. நகர் தொகுதியில் நடந்த தீபா பேரவை பொது கூட்டத்தில் கலந்து கொண்ட இவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருப்பதாக கூறினார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை சந்தித்து பேசினார். இதைதொடர்ந்து நேற்று முன்தினம் ராமசீதா, கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்றார். சுமார் ஒரு மணிநேரம் இந்த சந்திப்பு இருந்தது. பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
கடந்த செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதாவை, அப்பல்லோ மருத்துவமனைக்கு சுய நினைவு இல்லாமல் அழைத்து வந்தனர். ஒரு சாதாரண நோயாளியை கொண்டு வருவதுபோலவே வந்தனர். அவரை பரிசோதனை செய்தபோது, பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார்.
அவரது ரத்த சொந்தங்கள் யாரும் வரவில்லை. அவருடன் மருத்துவமனையில் தங்கும் நிலையிலும், யாரும் இல்லை. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அறையில், யாரையும் அனுமதிக்கவில்லை. டாக்டர்கள் கூட, அந்த அறைக்கு செல்ல மறுக்கப்பட்டனர்.
இதனால் ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருக்கிறது. மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தால், உண்மை நிலவரம் முழுவதுமாக தெரிந்துவிடும். இதுகுறித்து விசாரணை உடனடியாக நடத்த வேண்டும். அப்போதுதான் உண்மையை வெளியே கொண்டு வர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.