எப்படியாயிருந்தாலும் எங்ககிட்டேதான் வந்தாகணும்... அதிமுகவினருக்கு ஜெர்க் காட்டும் டி.டி.வி.தினகரன்..!
இருப்பவர்கள் இருக்கட்டும், கட்சியை விட்டு செல்பவர்களை பற்றி கவலையில்லை... எப்டியும் அதிமுக நம்மிடம் வரும்போது, இவர்களும் வந்துதானே ஆக வேண்டும்
தென் மாவட்டங்களில் வலுவாக இருந்த அமமுக கட்சி கலகலத்துப் போன நிலையில் நிர்வாகிகளும் ஒவ்வொருவராக ஓட்டம் பிடித்து வருகிறார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் நெல்லை மாவட்ட செயலாளர் மாற்று கட்சியில் இணைந்து விட்டார். இந்நிலையில் தென்காசி மாவட்ட செயலாளராகவும் பின் மாநில அமைப்பு செயலாளராகவும் இருந்தவரும் அதிமுகவுக்கு ஓட்டம் பிடித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமமுக கட்சியில் அவரது மாவட்ட செயலாளர் பதவியை பறித்து விட்டு மாநில பொறுப்பை வழங்கினாராம். ஏற்கெனவே, பெயருக்கு மட்டுமே கட்சி இருக்கும் நிலையில் பதவி பறிப்பால் துவண்டு போனதால், இந்த முடிவை எடுத்தாராம். தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் குக்கர் மட்டுமே இருக்கிறதாம். அதில் விசில் வருவதில்லையாம். ஆனால், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனோ, இருப்பவர்கள் இருக்கட்டும், கட்சியை விட்டு செல்பவர்களை பற்றி கவலையில்லை... எப்டியும் அதிமுக நம்மிடம் வரும்போது, இவர்களும் வந்துதானே ஆக வேண்டும் என்று சொல்வதாக அடிபொடிகள் பேசிக் கொள்கிறார்கள்.