திமுகவில் அன்வர் ராஜா..? அன்வர் ராஜாவை கலங்கடித்த தகவல்... உயிர் உள்ளவரை அதிமுக என அதிரடி அறிவிப்பு!
தேர்தல் முடிவுக்கு பிறகு அன்வர் ராஜா சற்று அமைதியாகிவிட்டார். இந்நிலையில் அன்வர் ராஜா திமுகவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் உலா வரத் தொடங்கின. மாற்று முகாமிலிருந்து வருவோருக்கு திமுகவில் நல்ல மரியாதை அளிக்கப்படும் நிலையில், அன்வர் ராஜா திமுகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் றெக்கைக் கட்டிப் பறந்தன.
அதிமுக முன்னாள் அமைச்சருமான முன்னாள் எம்.பி.யுமான அன்வர்ராஜா திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் உலா வந்த நிலையில் அதை மறுத்துள்ளார்.
ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்று 2001-ம் ஆண்டில் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பிடித்தவர் அன்வர் ராஜா. இதேபோல 2014-ம் ஆண்டில் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியானார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தலைமையின் அதன் நிர்வாகிகளும் பாஜகவுடன் நெருக்கமானார்கள். ஆனால், பாஜக எதிர்ப்பில் பெரிய அளவில் சமரசம் செய்துகொள்ளாத அன்வர் ராஜா, பாஜகவை எதிர்த்துவந்தார். குறிப்பாக முத்தலாக் சட்டத்தில் பாஜக அரசை கடுமையாக எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசினார்.
மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட நினைத்தார் அன்வர் ராஜா. ஆனால், அந்தத் தொகுதியை பாஜகவுக்கு அதிமுக அளித்தது. தேர்தல் முடிவுக்கு பிறகு அன்வர் ராஜா சற்று அமைதியாகிவிட்டார். இந்நிலையில் அன்வர் ராஜா திமுகவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் உலா வரத் தொடங்கின. மாற்று முகாமிலிருந்து வருவோருக்கு திமுகவில் நல்ல மரியாதை அளிக்கப்படும் நிலையில், அன்வர் ராஜா திமுகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் றெக்கைக் கட்டிப் பறந்தன.
இதுபோன்ற தகவல்கள் உலா வந்த நிலையில், அன்வர் ராஜா சார்பில் இன்று ஓர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், “உயிர் உள்ளவரை புரட்சித்தலைவரின் ரசிகனாக, புரட்சித்தலைவியின் உண்மை தொண்டனாக என்றும் கழக பணியில் A.அன்வர்ராஜா. அஇஅதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜா திமுகவிற்கு செல்வதாக எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் ஒரு பொய்யான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர், இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் திமுகவுக்கு செல்ல இருப்பதாக வெளியான தகவலுக்கு அன்வர்ராஜா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.