சென்னையில் கொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் காவல் துறை..
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்கள பணியாளர்களான காவலர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது காவல்துறையினர் மத்தியில் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்கள பணியாளர்களான காவலர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது காவல்துறையினர் மத்தியில் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறது. நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் கொரோனா தாக்கும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக அரசு தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். மருத்துவமனைகளில் நோயாளிகள் படுக்கைக்காக காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆக்ஸிஜன் படுக்கைகள் இன்று நோயாளிகள் உயிருக்கு போராடும் கொடூரம் தலைவிரித்தாடுகிறது. ஆக்சிஜன் வசிதியின்றி மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் முன் களப்பணியாளர்களான போலீசார், பத்திரிக்கையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உயிரிழக்கும் அவலம் தொடர்கிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இது காவலர்கள் மத்தியில் அதிர்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ரவி (57). இவர் மதுரவாயில் நாகாத்தம்மன் கோவில் தெருவில் தனது மனைவி கஸ்தூரி வடிவு மற்றும் மகன்கள் விஜயன், ஹரிஹரன் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்ட இவருக்கு கடந்த 8 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதுடன் நுரையீரலில் 50% பாதிப்பு ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு ஆக்ஸிஜன் மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆட்பட்ட இவர் கடந்த ஓராண்டாக சிறுநீரக பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.