எதிர்கட்சிகளின் துணை குடியரசு தலைவர் வேட்பாளர் அறிவிப்பு... காந்தியின் பேரனை களத்தில் இறக்கியது காங்கிரஸ்
காங்கிரஸ் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
குடியரசு தலைவர் பிரணாப் பதவிக்காலம் வருகிற 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, வரும் 17 ஆம் தேதி புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
பாஜக குடியரசு தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் மற்றும் எதிர்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளராக மீரா குமாரும் போட்டியிடுகின்றனர்.
துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. துணை குடியரசு தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான மனு தாக்கல் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி, 18 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் உள்ள நூலகத்தில் எதிர்கட்சிகளின் கூட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காலை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், பாஜக கூட்டணியில் இல்லாத 17 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன. கூட்டத்தில், எதிர்கட்சிகளின் துணை குடியரசு தலைவராக கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
72 வயதான கோபாலகிருஷ்ண காந்தி, மேற்கு வங்க ஆளுநராக கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். தற்போது கோபால கிருஷ்ண காந்தி, எதிர்கட்சியின் துணை குடியரசு தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.