நீங்கள் இப்போது தமிழகத்தில் திமுகவின் ஆக்சிஜன் உதவியுடன் ஐசியுவில் இருக்கிறீர்கள். நாங்கள் புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கிறோம். நமது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரித்த புதுவை மக்களுக்கு நன்றி. அது ஒரு மைல்கல். 

தமிழகத்தை ஒருபோதும் பாஜக ஆட்சி செய்ய முடியாது என்ற ராகுல் காந்தியின் பேச்சு பொருத்தமற்றது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மக்களவையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி பேசினார். அப்போது, அவரது பேச்சில் அனல்பறந்தது. இந்த நாடு இரண்டாக பிரிந்து உள்ளது. ஓர் இந்தியா பணம் படைத்தவர்களுக்காக இருக்கிறது. மற்றொரு இந்தியா பணம் இல்லாத ஏழைகளுக்கானதாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை மக்களாட்சிதான் நடைபெறுகிறது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மன்னர் ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறார்கள். 

நீட் தேர்வு விலக்கு வேண்டும் என தமிழகம் உங்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. தமிழகத்தின் கோரிக்கைகள் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லை. தமிழகம் மீண்டும் மீண்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கும். நீங்கள் மறுத்து அவர்களை வெளியேற்றுகிறீர்கள். மக்களின் கருத்தை அரசர் கேட்காது போல உங்கள் அரசு செயல்படுகிறது. தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் தனித்துவம் கொண்டவை. அவற்றை மதித்து சம உரிமை கொடுக்கப்பட வேண்டும். அனைத்து மாநில மக்களுக்கும் சமஉரிமை கொடுக்கப்பட வேண்டும். ஒரு போதும் உங்களுடைய வாழ் நாளில் தமிழ்நாட்டை நீங்கள் ஆட்சி செய்யவே முடியாது என ஆவேசமாக பேசி தெறிக்கவிட்டார். இந்நிலையில், ராகுலின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- வழக்கம்போல் உங்கள் பேச்சைக் கேட்டு நாங்கள் சிரித்து மகிழ்ந்தோம் ராகுல் ஜி. நீங்கள் உங்கள் பேச்சில் தமிழகத்தை பாஜக ஆளவே முடியாது என்று மீண்டும் மீண்டும் கூறினீர்கள். நான் தமிழகத்தின் மைந்தன் என்ற வகையில் இந்த விஷயத்தில் உங்களை வழிநடத்த விரும்புகிறேன் ராகுல் ஜி. 

நீங்கள் இப்போது தமிழகத்தில் திமுகவின் ஆக்சிஜன் உதவியுடன் ஐசியுவில் இருக்கிறீர்கள். நாங்கள் புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கிறோம். நமது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரித்த புதுவை மக்களுக்கு நன்றி. அது ஒரு மைல்கல். அந்த மைல்கல்லின் அடுத்த ஜங்ஷன் தமிழமாகத் தான் இருக்கும். வரலாற்றை எப்போதும் மறக்காதீர்கள் சார். அமேதியில் நடந்தது போன்றதொரு வரலாறு மீண்டும் நிகழ்த்தப்படும். இப்போதைக்கு விடைபெறுகிறேன் சார். அடுத்த நீங்கள் போலியாக ஒரு சர்ச்சையை உருவாக்கும் வரை விடைபெறுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.