போலீசை விமர்சித்து கோஷம்..! விடுதலை சிறுத்தை கட்சி மீது நடவடிக்கை.? ஸ்டாலினுக்கு அட்வைஸ் சொல்லும் அண்ணாமலை
காவல்துறையை விமர்சித்து முழக்கம் எழுப்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்
காவல்துறைக்கு எதிராக கோஷம்
காவல்துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது காவல்துறையை அவதூறு செய்யும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதற்க்கு காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காவல்துறையினர் தங்கள் பணியைச் செய்ததற்காக, அவர்கள் மாண்பை குறைப்பது போல், “காவல் நாய்களே”, “எச்சைப் பிழைப்பு”, போன்ற கோஷங்களை எழுப்புவது காக்கி சட்டைக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்பதை இதுபோன்ற அரசியல் கட்சிகள் உணர வேண்டும்.
அண்ணாமலை கண்டனம்
ஓரிரு காவலர்கள் செய்யும் தவறுகளுக்கு, ஒட்டு மொத்த காவல்துறையினரை அவதூறாகப் பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. தங்களது உயிரை துச்சமாகக் கருதி, மக்களை காக்க உழைக்கும் காவல்துறையினரை, தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும், அரசியல் காரணங்களுக்கும், இது போன்று அவதூறாகப் பேசுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திடுக
காவல்துறையினரின் மன உறுதியை குறைக்கும் வகையில் கோஷங்களை எழுப்பும் தங்களது கூட்டணி கட்சியினர் மேல், காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்