உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதில், திமுக அரசியல் செய்து வருவதாக பாஜக மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் இந்தியர்கள் ஏராளமானோர் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலம் இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்களையும் மீட்கும் பணியில் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. அதில் தமிழக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் அடங்கியயுள்ளனர் இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால் தொடர்ந்து மாணவர்கள் அழைத்து வரப்படுவதாகவும் இவ்வாறு இருக்க, தமிழக அரசு எம்பிக்கள் குழுவினரை அனுப்பவது தேவையற்றது எனவும் தமிழ்நாடு அரசு தனது அதிகார எல்லைக்குள் இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்திருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தநிலையில், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 56வது வார்டு பாஜக சார்பில் போட்டியிட்ட காடேஸ்வரா தங்கராஜ் வெற்றி பெற்றதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா மற்றும் வெற்றிக்கு உதவியவர்களுக்கு பாராட்டு விழா தாராபுரத்தில் நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசியவர், உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் அதிக வாக்கு சதவீதத்தை பெற்றிருப்பதாகவும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் அதிகளவு நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். உக்ரைன் நாட்டில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்டு வருவதிலும் திமுக பொய்யான அரசியல் செய்து வருவதாகவும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு முழுவீச்சில் மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் உச்சகட்டமாக போர் நடைபெற்று வந்த நிலையில் ரஷ்ய பிரதமருடன் பேசி போரை நிறுத்தி இந்திய மாணவர்களை ரஷ்யா அழைத்துச் சென்று அங்கிருந்து இந்திய அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். 

ஆனால் கோபாலபுரத்தில் இருந்து பேருந்தை எடுத்துச் சென்று உக்ரைனில் இருந்து மாணவர்களை அழைத்து வந்தது போல் திமுக அரசியல் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். இந்திய மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவதில் எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை எனவும் தெரிவித்தார். மாணவர்களை மீட்பதில் மத்திய,மாநில அரசுகள் மோதிக்கொள்ளாமல் மீட்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அங்கு படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்களின் எண்ணமாக உள்ளது.