ராஜ்யசபா எம்.பி ஆகும் சிரஞ்சீவி..? அரசியலில் அடுத்த ரவுண்ட் வருவாரா..? ஜெகன் மோகனின் புது பிளான் !!
ஆந்திர முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு ராஜ்யசபா சீட் வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தெலுங்குத் திரையுலகில் வசூல் மன்னனாக இருந்த சிரஞ்சீவி, அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகி, பின் கட்சியைக் கலைத்துவிட்டு, காங்கிரசில் கட்சியை ஐக்கியப்படுத்தி எம்.பி, மந்திரி ஆக இருந்து அரசியலை விட்டு முற்றிலும் விலகினார். தற்போது அரசியலே வேண்டாம் என ஒதுங்கி இருக்கிறார்.
கடந்த வியாழன் அன்று நடந்த சந்திப்பின் போது, ஜெகன் மோகன் ரெட்டியும், நடிகர் சிரஞ்சீவியும் திரையுலக பிரச்சனைகளை விட அரசியல் பற்றி அதிகம் விவாதித்ததாக முதல்வர் அலுவலகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து இருக்கிறது. ஜெகன் மோகன் சிரஞ்சீவிக்கு மதிய விருந்து அளித்தார். அதிகாரப்பூர்வமாக இந்த சந்திப்பின்போது, ‘ஆந்திராவில் சினிமா டிக்கெட் விலை குறித்த சர்ச்சையை விவாதிக்க இருந்தது. இருப்பினும், சிரஞ்சீவியோ அல்லது முதல்வரோ ராஜ்யசபா சீட் குறித்து பேசியதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆந்திராவில் நான்கு ராஜ்யசபா இடங்கள் காலியாகிவிடும். இந்த காலியிடங்கள் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் விஜயசாய் ரெட்டி, ஓய்வுபெறும் நிலையில், மற்றொரு பதவிக் காலத்தைப் பெற வாய்ப்புள்ள நிலையில், மாநிலங்களவையில் உள்ள பலத்தைப் பொறுத்தவரை, பாஜகவால் காலியாகும் மூன்று இடங்களை அக்கட்சி வெல்லும். கூடிய விரைவில் இதற்கான விடை தெரிந்துவிடும்.