தனியார் மருத்துவமனைகளை அரசின் கீழ் கொண்டு வந்து அறிவிப்பு.!! கொரோனா களத்தில் அதிரடி காட்டிய முதலமைச்சர் ஜெகன்.
தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவில் உள்ள மருத்துவர்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ளும் என ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்தார்.
ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இனி அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அரசு மருத்துவமனைகளில் கீழ் செயல்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார் . கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் . சீனாவைத் தொடர்ந்து உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது, உலக அளவில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1251 ஆக உயர்ந்துள்ளது . இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன , ஊரடங்கு உத்தரவு பொது நிகழ்ச்சிகளுக்கு தடை, தேவையின்றி கூட தடை , மாநில எல்லைகளுக்கு சீல் வைத்து பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன . அதேபோல் தங்கள் மாநிலத்தில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும், தேவையான வென்டிலேட்டர் மற்றும் மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்யவும் அந்தந்த மாநில அரசுகள் தீவிரம் காட்டுகின்றன . இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸுக்கு 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் கொரோனா வைரஸில் அதிரடியாக களமிறங்கியுள்ள அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி , கொரோனா வைரஸ் தொடர்பாக மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இன்று விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் ,
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக குறைவு , ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது . இனி தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் , தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவில் உள்ள மருத்துவர்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ளும் என ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்தார். எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதில் கவர்ச்சிக்கும் மக்கள் நலனில் அக்கறைக்கும் குறைவே இருக்காது என்று அம்மாநில மக்களால் பாராட்டப்பட்டு வரும் முதல்வர் ஜெகன் மோகன் ரொட்டியின் , தனியார் மருத்துவமனைகளும் இனி அரசின் கீழ் செயல்படும் என்ற அறிவிப்பு ஆந்திர மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .