முதல்வர் போஸ்டரில் ஜொலிக்கும் அன்பு: வயிறெறியும் சசிக்குமார் குடும்பம்...
அதிர வைக்கிறது அந்த போஸ்டர்! எதற்கும் மிரளாத மதுரக்காரய்ங்களே அந்த போஸ்டரை பார்த்து ’சர்தாண்டியேய்’ என்று மீசையை நீவுகிறார்கள். மதுரக்கார போலீஸோ என்ன செய்வதென்று புரியாமல் கைபிசைந்து நிற்கிறது.
அப்படியென்ன போஸ்டர் அது?
இயக்குநர் சசிக்குமாரின் மாமன் மகன் அசோக்குமாரின் தற்கொலை விவகாரத்தின் முக்கிய குற்றவாளியாக பேசப்படும் அன்புச்செழியனை பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது போலீஸ். ஆளுங்கட்சியின் சில முக்கிய புள்ளிகளின் ஆதரவு இருப்பதால்தான் அவர் செளகரியமாக தலைமறைவாய் இருக்கிறார். அன்புவை நெருங்க முடியாது! அப்படியே தூக்கினாலும் போலீஸால் எதுவும் செய்ய முடியாது! என்று ஒரு பேச்சு இருக்கிறது.
ஆனால் ஆளுங்கட்சி தரப்பிலிருந்தோ ‘வீணாக இதில் அரசின் பெயரை கெடுக்க வேண்டாம்.’ என்று ஒற்றை வரி பதிலாக வந்து விழுந்திருக்கும் நிலையில், மதுரையில் ஒட்டப்பட்டிருக்கும் அந்த போஸ்டர் மிரட்டுகிறது.
அதாவது ஜெயலலிதா இறந்து ஓராண்டாகும் நிலையில் 5-ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக மெளன அஞ்சலி பேரணி நடத்தப்பட இருக்கிறது. மாலை 4 மணியளவில் தெற்குமாசி வீதியில் துவங்கி மேலமாசிவீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் முடிகிறது.
இது தொடர்பாக மதுரையெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்களுடன் பெரிய சைஸில் எடப்பாடியாரும், பன்னீரும் அவர்களை விட சின்ன சைஸில் செல்லூர் ராஜூவும் சிரிக்கின்றனர். தங்கள் தலைவி இறந்த நினைவு நாளில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு சிரித்தபடி போஸ்டரடித்த ஒரே கட்சி இதுவாகத்தான் இருக்கும்.
இதெல்லாம் பரவாயில்லை எடப்பாடியாரின் படத்துக்கு கீழே அன்புச்செழியனின் படமும் மெகா சைஸில் பிற நிர்வாகிகளுடன் இணைத்து போடப்பட்டுள்ளது. இதுதான் மிரள வைத்துள்ளது.
ஆக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இருக்கும் போஸ்டரிலேயே அன்புவின் படத்தை தைரியமாக போடுகிறார்கள் என்றால் அவரை இவர்கள் எப்படி பிடிப்பார்கள்? விசாரிப்பார்கள்? தண்டிப்பார்கள் என்பதே சசிக்குமார் தரப்பின் கேள்வி.
இறந்துபோன அசோக்குமார் மற்றும் இயக்குநர் சசிக்குமார் குடும்பங்கள் வசிப்பதும் மதுரை என்பதால் தங்கள் வீட்டருகில் இந்த போஸ்டரைப் பார்த்துவிட்டு வயிறு எறிகிறார்களாம் அவர்கள்.
என்ன பண்றது! வல்லார் வகுத்ததுதான் வாழ்க்கையோ?!