தீபாவளி போனஸ்… இது நியாயமல்ல… பட்டாசாய் வெடித்த அன்புமணி…
பொதுத்துறை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் பாதியாக குறைக்கப்பட்டிருப்பது நியாயமல்ல என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: பொதுத்துறை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் பாதியாக குறைக்கப்பட்டிருப்பது நியாயமல்ல என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசில் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் 10 சதவீதமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந் நிலையில் இந்த போனஸ் போதாது என்றும் உயர்த்தி தர வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு தீப ஒளிக்காக 10%, அதாவது ரூ. 8400 மட்டும் தான் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு இது போதுமானதல்ல!
கடந்த 25 ஆண்டுகளில் பெரும்பாலான ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் நடப்பாண்டில் போனஸ் அளவு உயர்த்தப்படாவிட்டாலும் பரவாயில்லை.... ஆனால், பாதியாக குறைக்கப்பட்டிருப்பது நியாயமல்ல!
கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பை காரணம் காட்டி 10% போனஸ் வழங்கப்பட்டதை அனைத்துக் கட்சிகளும் விமர்சித்தன. நடப்பாண்டில் நிலைமை சீரடைந்துள்ள போதிலும் பாதியளவு மட்டுமே போனஸ் வழங்குவதை ஏற்க இயலாது. குறைந்தது 20% ஆக போனசை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.