Asianet News TamilAsianet News Tamil

திருமங்கலத்தில் விதைத்ததை... ஆர்.கே.நகரில் அறுவடை செய்துள்ளது! திமுகவை கண்டபடி விளாசும் அன்புமணி!

Anbumani Ramadoss condemned
Anbumani Ramadoss condemned
Author
First Published Dec 24, 2017, 4:40 PM IST


ஆர்.கே.நகரில், தினகரன் முன்னிலை பெற்று வரும் நிலையில், திமுகவின் நிலை பரிதாபமாக உள்ளது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு எந்த வகையிலும் அதிர்ச்சியோ வியப்போ அளிக்கவில்லை. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். தமிழ்நாட்டில் இனி ஜனநாயகம் எப்படியெல்லாம் படுகொலை செய்யப்படுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக அன்புமணி கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுக, அதிமுக, தினகரன் ஆகிய மூன்று தரப்புமே வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்தன. தேர்தலில் வெற்றி பெற பணம் கொடுத்தால் மட்டும் போதாது... மற்ற வேட்பாளர்கள் கொடுப்பதை விட அதிகமாகக் கொடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதுதான். அதைத் தான் தினகரன் தரப்பினர் செய்தார்கள்... அதனால்தான் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதுதான் யதார்த்தம்.
இதைத்தாண்டி வேறில்லை என்றும் கூறியுள்ளார்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தினகரன் தமிழகத்திற்காகவோ, தமிழக மக்களின் நலனுக்காகவோ போராடியவர் அல்ல. தமிழகத்திற்கு அவர் எந்த நன்மையும் செய்து விடவில்லை. அப்படிப்பட்ட ஒருவர் பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற முடியுமானால் இது எந்த வகையான ஜனநாயகம் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தத் தேர்தலில் திமுகவின் நிலை மிகவும் பரிதாபமாகியிருக்கிறது. அவர்கள் திருமங்கலத்தில் எதை விதைத்தார்களோ, அதை ஆர்.கே. நகரில் அறுவடை செய்திருக்கின்றனர். திமுகவால் போலிகள் என்று அடையாளம் காட்டப்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்ட பிறகும் அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க, வைப்புத் தொகையைக் கூட வாங்குவதற்கு படாதபாடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

13 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட போதிலும் கடந்த தேர்தலில் திமுக வாங்கிய வாக்குகளில் பாதியை தினகரன் கைப்பற்றியிருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் வாக்குகளுக்கு கொடுக்கப்பட்ட பணம்தான் என்பதை திமுக தலைமை இப்போதாவது உணர்ந்திருக்கும். அதிமுக அரசியல் கட்சியாக இருப்பதற்கே தகுதியற்றது என்பதால் அதன் செயல்பாடுகளை ஆராயத் தேவையில்லை என்றும்
அன்புமணி கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios