மாற்று அரசியலை அன்புமணியால் மட்டுமே தரமுடியும்.. ரஜினி, கமலால் கண்டிப்பாக முடியாது..!
ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது.
ரஜினி அரசியல் பேசினாலும் நேரடி தேர்தல் அரசியலில் ஈடுபடுவது குறித்தும் கட்சி தொடங்குவது குறித்தும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
ஆனால் கட்சி தொடங்கி தனியாக தேர்தலை சந்திக்க இருப்பதாக கமல் வெளிப்படையாகவும் உறுதியாகவும் தெரிவித்து விட்டார்.
கருணாநிதி, ஜெயலலிதா அரசியலில் இல்லாததால் உருவாகி இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப ரஜினியும் கமலும் முயற்சிக்கின்றனர். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக உருவாக வேண்டும் என அன்புமணி, சீமான் போன்றோர் முயற்சித்து வருகின்றனர். தற்போது ரஜினியும் கமலும் அந்த வரிசையில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், ரஜினி மற்றும் கமல் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கமலின் சகோதரர் சாருஹாசன், தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்று தேவை இருக்கிறது. ஆனால் அந்த மாற்றம் நிகழ வேண்டுமானால் மக்கள் திருந்த வேண்டும். தேர்தலில் பணப்புழக்கம் இல்லாத நிலை உருவானால் தான் மக்களுக்கான அரசு அமையும் என சாருஹாசன் தெரிவித்தார்.
அன்புமணி, சீமான் போன்றோரே திமுக, அதிமுகவிற்கு மாற்றாக உருவாக முடியுமே தவிர ரஜினியோ கமலோ மாற்று அரசியலைத் தரமுடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழகத்தில் மாற்று அரசியலை அன்புமணியால் மட்டுமே தர இயலும். தற்போதுள்ள வேறு எந்த தலைவருக்கும் அந்த தகுதி இல்லை என சாருஹாசன் உறுதியாகத் தெரிவித்தார்.