Anbumani has commented on Rajini political speech

தமிழகத்தில் ரஜினி அரசியலுக்கு வந்தால் எதையும் சாதிக்க முடியாது எனவும் கமலஹாசன் தைரியமானவர் எனவும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் அடுத்த 5 நாட்கள் வரை தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்தார். அதன்படி 12 ஆண்டுகளுக்கு பின் தனது ரசிகர்களை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் இன்று காலை சந்தித்தார்.

அப்போது நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்கள் முன் விளக்கினார். மேலும் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்பதை சூசமாக எடுத்துரைத்தார்.

இந்நிலையில், பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் கூறியதாவது : திரைத்துறையினர் தமிழகத்தை ஆட்சி செய்தது போதும். அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதில் கமல் எப்போதும் ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார். அவர் ஒரு தைரியமான நபர்.

அதே நேரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக கூறி வரும் ரஜினி, அரசியலுக்கு வருவது பற்றி உறுதியான கருத்துக்களை தெரிவிக்காமல் இருந்து வருகிறார். அடுத்த 50 ஆண்டுகளுக்கும் இதையேதான் ரஜினி பேசுவார். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்குமுன், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், ரஜினி அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது சொந்த விருப்பம். ரஜினி அரசியலுக்கு வந்தால் மற்ற கட்சிகளை போல நானும் வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதேபோல, தமிழிசை கூறுகையில், ரஜினிகாந்த் தனிநபராக இருந்து எதனையும் சாதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவர் விருப்பம் என்றும் பாஜக அவரை வைத்து தமிழகத்தில் காலூன்றத் துடிக்கிறது என்றும் கூறியுள்ளர் திருமாவளவன், மேலும் ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என்று கூறியுள்ளார்.