அதிகார அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்.. பொங்கி எழுந்த டிடிவி தினகரன் !
கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. உயிரிழந்தோர் புகைப்படங்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தை தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. பல்வேறு கட்சி தலைவர்களும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அமமுக பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13பேர் சுட்டுக்கொல்லப்பட்டதன் 4ம் ஆண்டு நினைவு தினத்தில், அவர்களுக்கு இதய அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
மனிதநேயமற்ற அச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவிடாமல் தடுப்பதும்தான் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் இத்தகைய அதிகார அத்துமீறல்களுக்கு முடிவு கட்டமுடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.