ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, "அதைச் செய்து விடுவோம் இதைச் செய்து விடுவோம்" என வீராவேசமாகப் பேசிவிட்டு பதவிக்கு வந்த பிறகு, "மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருக்கிறோம்" என்று புதிய வேஷம் கட்டுவது திமுகவின் வழக்கமாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பு மட்டுமின்றி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 40க்கும் மேற்பட்ட எம்.பிக்களை வைத்திருக்கிற ஒரு கட்சியின் தலைவர் இப்படி சுய பச்சாதாபம் தேடி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்க முயற்சிக்கலாமா? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர் சங்கத்தின் 14வது மாநில மாநாட்டில் கலந்துகொண்டார். சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், "நான் எப்போதுமே அதிகம் பேசமாட்டேன். செயலில் நம்முடைய திறமையை காட்ட வேண்டும். அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கம் இல்லை . திமுக ஆட்சியின் போதெல்லாம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முன்னேற்றத்திற்கான ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசாங்க கஜானாவிற்கு வரவேண்டிய சரக்கு மற்றும் சேவை வரியை மொத்தமாக மத்திய அரசு பறித்துக் கொண்டு விட்டது. நிதி நிலைமை பொறுத்தவரை மத்திய அரசிடம் கொத்தடிமை போல கையேந்தும் நிலைமையில்தான் மாநிலங்கள் இருக்கின்றன. ஜிஎஸ்டி முதல் வெள்ள நிவாரண நிதி வரைக்கும் நமக்கு தர வேண்டிய விதிகளை முழுமையாக தரப்படுவதில்லை. தரப்படும் நிதியும் உரிய நேரத்தில் வழங்கப்படுவது இல்லை என்றார். இந்நிலையில், எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, தமிழ்நாட்டிலே என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் படத்தின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது என கூறி ஸ்டாலினை கடுமையாக டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, "அதைச் செய்து விடுவோம் இதைச் செய்து விடுவோம்" என வீராவேசமாகப் பேசிவிட்டு பதவிக்கு வந்த பிறகு, "மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருக்கிறோம்" என்று புதிய வேஷம் கட்டுவது திமுகவின் வழக்கமாக இருக்கிறது.

இவர்களின் இயலாமையை மறைக்க அன்றைக்கு கருணாநிதி செய்ததை இப்போது ஸ்டாலினும் செய்கிறார். அரசு ஊழியர் சங்க மாநாட்டில் இப்படி ஓர் அடிமை ராகத்தை அவர் இசைத்திருக்கிறார்.
அரசாங்கத்திற்கு 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பது தேர்தல் நேரத்தில் இஷ்டப்படி வாக்குறுதிகளை அள்ளி வீசியபோது ஸ்டாலினுக்குத் தெரியாதா? தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பு மட்டுமின்றி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 40க்கும் மேற்பட்ட எம்.பிக்களை வைத்திருக்கிற ஒரு கட்சியின் தலைவர் இப்படி சுய பச்சாதாபம் தேடி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்க முயற்சிக்கலாமா? “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, தமிழ்நாட்டிலே“என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் படத்தின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
