அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டம்… இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி !!
இன்று சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த இருக்கிறது. இந்த திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. மேலும் தமிழகம் முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியும் தொடங்கி வைக்கப்படுகிறது.
இதற்கான விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. கலைவாணர் அரங்கத்துக்கு எதிரேயுள்ள கார் நிறுத்தும் இடத்தில் விழா மேடை அமைக்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையிலும் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக அங்கு வரும் அவர் முதலில் மரக்கன்றை நடுகிறார். பின்னர் விழா மேடைக்கு வருகிறார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் இந்த விழாவில் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரை ஆற்றுகிறார்.
அதன்பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையுரை ஆற்றுகிறார். அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி சில பெண்களுக்கு ஸ்கூட்டரை வழங்கி, உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து இன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கும் பிரதமர் மோடி நானை புதுச்சேரியில் நடைபெறவுள்ள்ள விழாக்களில் பங்கேற்று பின்னர் மாலை குஜராத் புறப்பட்டு செல்கிறார்.