amit shah next target after karnataka

கர்நாடகா தேர்தல் பணிகள் முடிந்ததை அடுத்து பாஜகவின் அடுத்த பார்வை தெலுங்கானா மீது இருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசியலில் பரபரப்பான பல திருப்புமுனைகளுக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே எடியூரப்பா, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் பாஜக மேற்கொண்ட வியூகத்தை கர்நாடகாவில் காங்கிரஸ் மேற்கொண்டு பாஜகவை ஆட்சியமைக்க விடாமல் தடுத்தது.

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்தோடு செயல்பட்டு வரும் பாஜக, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், குஜராத், இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களை கைப்பற்றிய பாஜகவால் கர்நாடகாவில் ஆட்சியமைக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து, பாஜகவின் அடுத்த இலக்கு தெலங்கானாவை நோக்கி நகர்ந்துள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் கே லக்‌ஷ்மண் தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய லக்‌ஷ்மண், டெல்லியில் அமித் ஷா தலைமையிலான கூட்டம் அண்மையில் நடந்தது. அமித் ஷா தெலுங்கானாவை எதிர்நோக்கி இருக்கிறார். தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம், ஒரிசா ஆகிய மாநிலங்களின் மீதுதான் கவனம் இருக்கிறது.

தெலுங்கானாவின் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் தேர்தல் குறித்து திட்டம் தீட்டுவதற்காக அடுத்த மாதம் அமித் ஷா வருகை தர இருக்கிறார். 119 தொகுதிகளில் 40 முதல் 50 தொகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கும் திட்டம் நிறைவடைந்துவிட்டது. மீதமுள்ள தொகுதிகளிலும் இது இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் என லக்‌ஷ்மண் தெரிவித்தார்.

தெலுங்கானாவில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது.