அமித்ஷா மீது அமெரிக்கா நடவடிக்கை..?? இஸ்லாமியர்களை தனிமைப்படுத்த முயன்றதால் விபரீதம்..??
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொல்லும் இந்தியாவின் செழுமை மிக்க மத சார்பற்ற தன்மைக்கும் , இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்குமே எதிரானது.
குடியுரிமை திருத்த மசோதாவைக் கொண்டு வந்து அமைச்சர் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்காவின் சர்வதேச மனித சுதந்திரத்திற்கான ஆணையம் வலியுறுத்தியுள்ளது . இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த மசோதா மிகவும் அபாயகரமானது என அமெரிக்காவின் மத சுதந்திரத்திற்கான ஆணையம் குறிப்பிட்டுள்ளது . புதிதாக கொண்டுவந்துள்ள இந்த சட்ட மசோதாவின்படி பாகிஸ்தான் , வங்காளதேசம் , ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவிற்கு வந்த இந்து , சீக்கிய , புத்த , மதத்தவர்கள் ஜைனர்கள் , பார்சி , போன்றோர் இனி சட்டவிரோத குடியேறிகளாக கருதப்படாமல் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதில் இஸ்லாமியர்கள் மட்டும் இடம்பெறவில்லை , அதேபோல் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஈழத் தமிழ் அகதிகளை பற்றியும் தகவல் இல்லை, மத்திய அரசின் இத்திட்டத்திற்கு காங்கிரஸ் , திமுக , சிவசேனா , உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன . இதற்கு எதிராக வட கிழக்கு மாகாணங்களில் போராட்டம் வெடித்துள்ளன. இந்நிலையில் மோசமான அபாயகரமான இச்சட்டத்தை கொண்டு வந்ததற்காக இந்திய உள்துறை அமைச்சர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்காவிலும் கோரிக்கை எழுந்துள்ளது . இது தொடர்பாக அமெரிக்காவின் சர்வதேச மனித சுதந்திரத்துக்கான ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , புதிய சட்டத் திருத்தத்திற்கு இந்தியாவில் இரு அவைகளிலும் ஒப்புதல் அளித்து விட்டால் அதை கொண்டுவந்த அமைச்சர் மற்றும் இச்சட்டத்தை கொண்டு வர காரணமாக இருந்த தலைவர்கள் மீது அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இச்சட்ட திருத்த மசோதாவில் இஸ்லாமியர்களை மட்டும் குறிவைத்து தனிமைப் படுத்தி உள்ளார்கள் , வெளிப்படையாக மத அடிப்படையிலான குடியுரிமை என்று அறிவித்துள்ளார்கள். இது சமூகத்தை ஆபத்தான பாதையில் கொண்டு செல்லும் முயற்சி , இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொல்லும் இந்தியாவின் செழுமை மிக்க மத சார்பற்ற தன்மைக்கும் , இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்குமே எதிரானது. அதாவது மனித உரிமை மற்றும் மதச் சுதந்திரத்திற்கு எதிராக செயல்படும் நபர்களின் மீது அமெரிக்கா அரசு குறிப்பாக அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்ட் கடுமையான நடவடிக்கையில் இறங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.