அலோக் வர்மா பதவி பறிப்பு !! மோடி மீண்டும் அதிரடி !!
77 நாட்கள் கட்டாய விடுப்புக்குப் பின் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா நேற்று மீண்டும் பதவி ஏற்றுக் கொண்ட நிலையில், தற்போது பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு அவரை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.
சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினர். இதனையடுத்து அலோக் வர்மாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி இரவு மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. மேலும் அவருடைய அதிகாரங்களையும் பறித்தது. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவையும் அரசு நியமித்தது.
கட்டாய விடுமுறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அலோக் வர்மாவின் அதிகார பறிப்பு மற்றும் கட்டாய விடுமுறைக்கு காரணமான மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தனர். மேலும் இடைக்கால இயக்குனர் நியமனமும் ரத்து செய்யப்பட்டது.
கோர்ட்டு உத்தரவால் சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா செயல்படுவதில் தடை நீங்கியது. இதனையடுத்து 77 நாட்கள் கட்டாய விடுப்பில் இருந்த அலோக் வர்மா, நேற்று மீண்டும் அலுவலகம் வந்து பதவி ஏற்றுக்கொண்டார். இவரது 2 ஆண்டு பதவிக்காலம், வருகிற 31-ந் தேதியோடு நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு இன்று மாலை கூடியது. இதில் எதிர்கட்சித் தலைவர் மல்லிகாஜுன கார்கே, நீதிபதி சிக்ரி ஆகியோர் பங்கேற்றனர். அதில் அலோக் வர்மா மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதால் அவரை பதவி நீக்கம் செய்து என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அலோக் வர்மா உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்ட ராவ் தொடர்ந்து சிபிடீ இயக்குநராக தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.