இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... ரெய்டு பற்றி கூலாகப் பேட்டி கொடுத்த விஜயபாஸ்கர்..!
எனது இல்லத்தில் எந்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள், கல்லூரி, குவாரி மற்றும் அவருடைய உறவினர், நண்பர்கள் வீடுகள் என பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 20 துணைக் கண்காணிப்பாளர்களின் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீஸார் 30 குழுக்களாகப் பிரிந்து இன்று சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனையில் ரூ.23.82 லட்சம் ரொக்கம் சிக்கியது. மேலும் 4.87 கிலோ தங்கம், முக்கிய ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்தச் சோதனையைச் சட்ட ரீதியாக நான் எதிர்கொள்வேன். என்னுடைய வீட்டில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை. பொதுவாழ்க்கையில் நான் இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்து வருகிறேன். ஆனால், மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் எனக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அதிமுகவிற்கு சோதனை என்பது புதிதல்ல. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். பொதுவாழ்க்கையில் பயணிப்போருக்கு இதுபோன்ற சோதனைகள் நடைபெறுவது வழக்கம்தான். இதைச் சந்திக்கத் தயார்” என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.