ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த மன்னர்கள்- அபிராமி மாலில் ஆயிரத்தில் ஒருவன் பார்த்த ஓபிஎஸ், அமைச்சர்கள்
மெரினா முதல் தமிழகம் முழுதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்ட களத்தில் இருக்கும் போது , எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கலையுலகினர் நடத்தும் விழாவில்கலந்துகொண்டு அபிராமி மாலில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்த்து பொழுதை கழித்தனர்.
கடந்த சனிக்கிழமை அவனியாபுரத்தில் வைக்கப்பட்ட சிறு பொறி பாளமேட்டில் நெருப்பாகி , அடங்கா நல்லூரில் எரிய ஆரம்பித்து இன்று தமிழகம் முழுதும் போராட்ட தீ பெரும் ஜுவாலையாக கொழுந்து விட்டு எரிகிறது.
சென்னை மெரினா , கோவை கொடீஷியா மைதானத்தில் பத்தாயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் இறுதிவரை கலையாமல் உள்ளனர். காமராஜர் சாலையே புதுவருடப்பிறப்பு அன்று இருப்பது போல் புத்தாண்டு கொண்டாட்டம் போல் இளைஞர்களால் சூழப்பட்டுள்ளது.
தங்கள் போராட்டத்தை கைவிடாத இளைஞர்களால் போராட்டம் இன்னும் தீவிரமடைந்துள்ளது. முதல்வர் ஓபிஎஸ் பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். போராட்டம் சூடு பிடிக்க பிடிக்க கலையுலகின் முக்கிய நடிகர்கள் எல்லோரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம் அரசு தரப்பில் என்ன நினைக்கிறார்கள் என்றே தெரியாத அளவுக்கு மவுனமாக உள்ளனர். நாடுமுக்கியமான பதற்றமான சூழ்நிலையில் உள்ள நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பத்தாயிரக்கணக்கில் இளைஞர்கள் திரண்டு நின்ற பதற்றமான நிலையில் அமைச்சர்கள் , முதல்வர் ஓபிஎஸ் , சசிகலா உள்ளிட்டோர் திரையுலகினர் நடத்திய எம்ஜிஆர் விழாவில் கலந்துகொண்டு ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்த்தனர்.
ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்று படித்துள்ளோம், அதை பார்க்கிறோம் என்றார் போராட்ட களத்தில் உள்ள இளைஞர் ஒருவர்.