அட! எதைச்செய்தாலும் சட்டப்படிதான் செய்யணுமாம்! சட்டம் எல்லோருக்கும் பொதுவாம்: சொல்வது யாரு தெரியும்ல? எஸ்.வி.சேகரு
தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 90 கால கட்டங்களில் காமெடியனாக, காமெடி ஹீரோவாக வலம் வந்தவர் எஸ்.வி.சேகர். பின், குறிப்பிட்ட மதம் ஒன்றின் மூலமாக அரசியல் மட்டத்திலும் அடிக்கடி பரபரப்புகளை கிளப்பியபடி வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மீடியாவின் பெண் நிருபர்களை குறிவைத்து இவர் வைத்த குதறல் விமரசனத்தால் இவர் மீது வழக்கு பாய்ந்தது. இவரை கைது செய்ய சொல்லி அனைத்து பத்திரிக்கை மன்றங்களும், கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே ஆர்பாட்டங்களை நடத்தின, பெரும் குரல் கொடுத்தன. ஆனால் திடீரென எஸ்.வி.சேகர் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் போனால் சில நாட்கள் பின் போலீஸ் பாதுகாப்புடன் ஹோட்டல்கள், புறநகர் ரெஸ்ட்டாரண்டுகளில் வலம் வந்தார். இதற்கு எதிராக பெரும் கூக்குரல்கள் எழுந்தன.
ஆனால் போலீஸும் கண்டுகொள்ளவில்லை, அமைச்சரவையும் கண்டுகொள்ளவில்லை. ’சட்டம் இங்கே எல்லோருக்கும் சமமானதுதானா?’ என்று பத்திரிக்கையாளர்கள் கடும் கேள்வியெல்லாம் எழுப்பிப் பார்த்தனர்.. அதன் பின் அந்த கேஸும் அப்படியே வீரியம் இழந்து போனது. இப்போது எந்த எதிர்ப்புமின்று சகல சுதந்திரத்துடன், கெத்தாக வலம் வந்து, வளைய வந்து கொண்டிருக்கிறார் எஸ்.வி.சேகர்.
இந்த நிலையில், இயக்குநர் ராஜூ முருகனின் ‘ஜிப்ஸி’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத விவகாரம் போய்க் கொண்டிருப்பது எல்லோரும் அறிந்ததே. ‘இந்து மதத்தை விமர்சிப்பது போலவும், உத்திர பிரதேச முதல்வரை சீண்டுவது போலவும் நேரடியாகவே காட்சிகளை வைத்துள்ளீர்கள். இது ஏற்புடையதல்ல’ என்று தணிக்கை அமைப்பு சொல்லிவிட்டது. ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டும் கதைக்காகவில்லை. எனவே வழக்கு தொடரலாமா? எனும் எண்ணத்துடன் இருக்கிறது படத்தின் டீம்.
இந்நிலையில் இந்தப் பட விவகாரம் ஒரு விவாத பொருளாக மாறி இருக்கும் நிலையில், கருத்து சொல்லியிருக்கும் எஸ்.வி.சேகர் “மாநிலத்தின் பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாகும் வகையிலான காட்சிகளுக்கு அனுமதி கிடையாது. தனி நபரை அவதூறு செய்யும் படியோ அல்லது தனி நபர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் படியோ அல்லது நீதிமன்ற அவமதிப்பு செய்யும்படியான காட்சிகளோ அல்லது வசனங்களோ இருக்கக்கூடாது! என சென்சார் போர்டில் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதை மீறினால் அப்படத்துக்கு அனுமதி கிடைக்காது. எதைச் செய்தாலும் சட்டப்படிதான் செய்ய வேண்டும். எல்லோருக்கும் ஒரே அளவுகோல்தான் சென்சார் போர்டு வைத்துள்ளது.” என்று சீரியஸாக பேச....
அதற்கு “சென்சார் போர்டோட சட்டம் எல்லோருக்கும் பொதுன்னு வாய் வலிக்க பேசுற நீங்க, உங்க மீதான வழக்கு விஷயத்தில் சட்டத்தை ஏன் மதிக்கலை? நீங்க சட்டத்தை மதிக்காதப்ப, உங்களை வலிந்து கைது செய்ய வேண்டியவங்க ஏன் செய்யலை? நீங்களெல்லாம் சட்டத்தின் முன் அனைவரும் சமம்-ங்கிற டயலாக்கை பேசலாமா எஸ்.வி.சேகர்?” என்கிறார்கள்.
சர்தானோ?