கும்பலாக அறிவாலயம் வர திட்டம்... அழகிரி ஆதரவாளர்களின் அதிரடி!
திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவ்விரு தொகுதிகளிலும் அதிமுக, திமுக, அமமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவ்விரு தொகுதிகளிலும் அதிமுக, திமுக, அமமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், தமிழகத்தில் பருவமழை காரணமாக இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொண்டதற்கிணங்க, திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.
எப்படியாவது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்குடன், அதிமுக, திமுகவிற்கு முன்பாகவே அமமுக பிரச்சாரத்தை தொடங்கியது.முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இறப்புக்குப் பிறகு, திமுகவில் இணைய மு.க.அழகிரி தொடர்ந்து ஈடு வந்தார். தன்னை கட்சிக்குள் சேர்க்க வலியுறத்தி கையெழுத்து இயக்கம் நடத்தினார். இது தொடர்பாக அறிவாலயத்துக்கு நேரில் வர இருப்பதாகவும் அழகிரியின் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். திருவாரூர் தொகுதியில், திமுக சார்பில் வேறு ஒரு நபரை வேட்பாளராக நிறுத்துவதாக வெளியான தகவலை அடுத்து, அங்கு தானே வேட்பாளராக போட்டியிட முடிவெடுத்தார் அழகிரி.
இதற்காக திருவாரூர் தொகுதியில் தனக்கிருக்கும் ஆதரவு குறித்தும் ஆய்வு நடத்தினர். கருணாநிதிக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதால், நீங்கள் நிச்சயம் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்ததாம். இதன் பிறகே, மு.க.அழகிரி, திருவாரூர் தொகுதியில் கூட்டம் நடத்தும், கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்துக்கு செல்வதும் என அதிரடி காட்டினார். இந்த நிலையில், பருவமழை காரணம்காட்டி திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததது.
இடைத்தேர்தல் தள்ளிப்போய்விட்டதால் மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம் மு.க.அழகிரி. இந்த நிலையில், கருணாநிதிக்கு தொடர்ந்து புகழ் அஞ்சலி கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் வரும் 13 ஆம் தேதி திண்டுக்கல்லில் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி கூட்டம் ஒன்றை நடத்துகிறார் அழகிரி. இது குறித்து அழகிரி ஆதாவரளர் ஒருவர் கூறும்போது, நாளை மறுநாள் மாலை திண்டுக்கல் நாயுடு மகாலில் கருணாநிதிக்குப் புகழ் அஞ்சலி கூட்டம் நடக்க இருக்கிறது. இடைத்தேர்தல் தள்ளிப்போனதில் கொஞ்சம் அப்செட்டில்தான் இருக்கிறார்.
தி.மு.க போட்ட வழக்கும் ஆளும் கட்சியின் கடிதமும்தான் தேர்தலை நிறுத்துவதற்குக் காரணமாக அமைந்துவிட்டது. இடைத்தேர்தலை நடத்த மாட்டார்கள் என முன்கூட்டியே எங்களிடம் மு.க.அழகிரி கூறியிருந்தார் என்றார். இப்போது தேர்தலை நடத்த மாட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில்தான் நடத்துவார்கள் என்றார் உறுதியாக. திமுகவில் அழகிரி மீண்டும் சேர கையெழுத்து இயக்கம் நடத்தினோம். திமுகவில் அடிப்படை உறுப்பினராக இருக்கக்கூடியவர்களிடமே கையெழுத்து பெறப்பட்டது. ஒரு லட்சம் கையெழுத்துகளை வாங்க வேண்டும் என திட்டமிட்டோம்.
இதுவரை பத்தாயிரம் பேர் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக அவர்களது அடையாள அட்டையும் இணைத்திருக்கிறோம் என்றார். எங்களில் பலர் கட்டிசியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்கள். கட்சியில் இருந்து நீக்கப்படாத உறுப்பினர்களைத் திரட்டிக் கொண்டுபோய் அறிவாலயம் செல்ல உள்ளோம். 20 ஆம் தேதிக்குள் கையெழுத்து இயக்கம் தொடர்பான ஆவணங்களை தர உள்ளோம். கட்சிக்குள் அழகிரி சேர்க்கும் வரையில் அழகிரியின் போராட்டம் தொடரும் என்றார் அழகிரியின் ஆதரவாளர். அழகிரியின் இந்த நடவடிக்கைகள் குறித்து திமுகவின் முன்னணி நிர்வாகி ஒருவர் கூறும்போது, கட்சிக்குள் எப்படியாவது சேர வேண்டும் என்று அழகிரி தீவிரம் காட்டி வருகிறார்; அவருடைய பல்வேறு முயற்சிகளை பற்றியும் திமுக தலைமை பொருட்படுத்தவில்லை என்கிறார்.