அக்கா ஒரு நிமிஷம்… தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவரை அடித்து துவைத்த பாஜகவினர் !!
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், அக்கா இப்படி பெட்ரோல் விலை ஏறிப் போச்சே என தனது ஆதங்கத்தை வெளியப்படுதால் ஆத்திரமடைந்த பாஜகவினர் அவரை அடித்து துவைத்து வீசி எறிந்தனர். இந்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயித்து வந்தது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இது எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயில் சந்தை விலைக்கு ஏற்ப மாற்றி அமைதது வந்தன.
15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் ,டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் தினம் தினம் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது.
இதனால் விலைவாசியும் கடுமையாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்வு குறித்து பாஜகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் வேளையில் பிரதமர் மோடி அதுகுறித்து வாய் திறக்காமல் மவுனமாக இருந்து வருகிறார்.
மறுபுறம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து எதுவும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டார். ராஜஸ்தான் மாநில பாஜக அமைச்சர் மக்கள் பெட்ரோல் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பேட்டி அளித்தார். எதிர்கட்சிகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாரத் பந்த் நடத்தின.
இந்நிலையில் சென்னையில் பாஜக தலைவர் தமிழிசை பேட்டி அளிக்கும்போது பின்னால் நின்ற ஆட்டோ டிரைவர் ஒருவர் பவ்யமாக “அக்கா ஒரு நிமிடம் பெட்ரோல் விலை டெய்லி ஏறுதுக்கா” என தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.
அப்போது இதைக்கேட்ட தமிழிசை, அவரது பக்கம்கூட திரும்பாமல் சிரித்தபடி இருந்தார். ஆனால் அவரைப் பாஜக நிர்வாகிகள் கழுத்தில் கையைப்போட்டு இழுத்தனர். பின்னர் அவரை வெளியே இழுத்துச் சென்றவர்கள் அவரைத் சரமாரியாக தாக்கினார்.
தற்போது இந்தக் காட்சிகள் ட்விட்டர், வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெட்ரோல் விலை குறித்து கேள்வி கேட்ட ஒரே காரணத்துக்காக ஆட்டோ ஓட்டுநரை அடித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.