வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே இயந்திரங்களில் பதிவான வாக்குகள்!! அதிர்ச்சி தகவல்
உத்தர பிரதேசத்தில் கோரக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன், மத்தியில் ஆளும் பாஜகவின் வேட்பாளர்களை வீழ்த்தி சமாஜ்வாதி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக பல புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்த நிலையில், அதே குற்றச்சாட்டை தற்போது சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இல்லாமல் இருந்திருந்தால் சமாஜ்வாதி வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்.
பல இயந்திரங்களில் வாக்குப் பதிவு துவங்குவதற்கு முன்பே ஓட்டு பதியப்பட்டுள்ளது. பாஜக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. வாக்குச் சீட்டு முறை இருந்தால் மக்கள் இன்னும் தங்கள் கோபத்தை தெளிவாக வெளிப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.