சுமார் ஒரு வருட காலம்... ஒரே மேடையில் தந்தை முலாயமுடன் மகன் அகிலேஷ்!
சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள், அதனால் ஆட்சியை இழந்தது என பல சம்பவங்களுக்குப் பிறகு இன்று தந்தை முலாயம் சிங் யாதவுடன் மகன் அகிலேஷ் யாதவ் ஒரே மேடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
சமாஜ்வாதி கட்சியில் ஒரு வருடத்திற்கு முன் பிரச்னை ஒன்று பூதாகாரமாக வெடித்தது. கட்சியின் தலைவராக இருந்த முலாயம் சிங் யாதவ்வுக்கும் முதல்வராக இருந்த அவரது மகன் அகிலேஷுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்குக் காரணமாக அமைந்தது, முலாயமின் சகோதரரான ஷிவ்பால் யாதவுக்கும், அகிலேஷுக்கும் இடையே ஏற்பட்ட அதிகார போட்டி. இதில், தனது சகோதரருக்கு ஆதரவாக மகனை எதிர்க்கப் போக, கட்சியில் பிளவு ஏற்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் முன் சென்ற இந்தப் பிரச்னையில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான அணியே உண்மையான கட்சி என்று கூறி, சைக்கிள் சின்னத்தையும் தேர்தலில் பயன்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், அதன் பின்னர் முலாயம் பெரிதாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில் இன்று, ராம் மனோகர் லோஹியாவின் 50ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தந்தையும் மகனும் ஒன்றாக மேடையேறினர். இந்த நிகழ்ச்சிக்கு ஒரே வாகனத்தில் வந்த இருவரும், கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். பின்னர் ஒன்றாகவே லோஹியாவின் சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்த நிகழ்வில் ஷிவ்பால் யாதவ் கலந்து கொள்ளவில்லை.
குடும்பத்தில் ஏற்பட சண்டையால், கட்சி உடைந்து, தேர்தலில் தோற்று, ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்தனர் இருவரும் என்பது குறிபிடத்தக்கது.