எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து உடனடி நடவடிக்கை... அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு மத்திய அமைச்சர் உறுதி...!
திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவின் ட்விட்டர் பதிவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவதற்காக 27-1-2019 அன்று மாண்புமிகு பிரதமர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குனர் நியமிக்கப்பட்டு சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிலம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், இவ்விடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கு அண்ணா பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பணிகளை செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2020இல் அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான கட்டட பணிகள் துவங்கி வேகமாக நடைபெற்று வருகிறது, ஆனால் 2019ஆம் ஆண்டே அடிக்கல் நாட்டப்பட்டு இதுவரை இரண்டு ஆண்டுகளாகியும், இன்னும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படவில்லை என்றும், மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும் இன்னும் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகாத நிலையே நீடிக்கிறது என்பதும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நிலையில் தமிழக முதலமைச்சர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவின் ட்விட்டர் பதிவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த வேண்டி மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அவர்களுக்கு 27/05/2021 அன்று நான் எழுதிய கடிதத்திற்கு நேற்று (04/06/2021) மதியம் 1.30 மணியளவில் தொலைபேசி வாயிலாக பதிலளித்த மத்திய சுகாதார துறை கூடுதல் தனி செயலாளர் திரு.மதன் மோகன் தாஸ் அவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த மற்றும் அதற்கென தனி அதிகாரி நியமிப்பது குறித்த எனது கோரிக்கைகளை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சார்பாக உறுதி அளித்தார். மேலும் எய்ம்ஸ் பணிகளின் தேவைகள் குறித்த ஆலோசனைகளையும் கேட்டறிந்தார் என பதிவிட்டுள்ளார்.