அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை 'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எனவே, 'நீட் தேர்வு: ஏத்து' தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கையையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கும்
அதிமுகவைப் பொறுத்தவரை நீட் தேர்வு ரத்து தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் 6 மாதங்கள் கிடப்பில் போட்டுவிட்டு அரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டார். இதற்கு அரசியல்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, ஆளுநரை திரும்ப பெற வேண்டும் கொந்தளித்தனர்.

இந்நிலையில், நீட் தேர்வு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக, சட்டப்பேரவை அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக, அதிமுக, புரட்சி பாராதம் கட்சிகள் பங்கேற்கவில்லை. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜகவை பின்பற்றி அதிமுகவும் அறிவித்திருப்பது மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலம், அனைத்து கட்சி வட்டத்தை புறக்கணித்த அதிமுகவை மக்களும் புறக்கணிப்பார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நீட் தேர்வு ரத்து தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில்;- தங்களின் 3.2.2022 நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். அதில், மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட முன்வடிவினை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, மேதகு ஆளுநர் தமிழ்நாடு அரசிற்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக 5.2.2022 அன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற இருக்கும் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினரை அனுப்பி வைக்குமாறு தாங்கள் கோரி உள்ளீர்கள்.

'நீட்' தேர்வு ரத்து' குறித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துகள் ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும், 8.1.2022 அன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை 'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எனவே, 'நீட் தேர்வு: ஏத்து' தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கையையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
