என்னை ஒதுக்கியே தள்ளினாலும் அதிமுக மட்டும் வீழ்ந்துவிடக் கூடாது... மனம் மாறிய சசிகலா..!
தேர்தலில் அமமுக போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை எனவும், ஆனால் இதன்மூலம் அதிமுக வீழ்ந்துவிடக்கூடாது என்றும் சசிகலா கருதுகிறாராம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடிந்து, தமிழகம் திரும்பியுள்ள தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.. ஆனால் சென்னை வந்த பிறகு செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை.. அமமுகவை அதிமுகவோடு இணைத்து கட்சியை தனது கட்டுப்பாடின் கீழ் கொண்டு வர சசிகலா முயற்சித்து வருகிறார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி, கே.பி முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம் போன்றோர் சசிகலா குடும்பத்தை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று கூறி வருகிறனர். துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் சசிகலா பற்றி வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.
இதனிடையே அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் சசிகலா பக்கம் செல்லக்கூடும் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக, 50 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி அன்று முதல்வர் பழனிசாமி வெளியிட உள்ளார் என்று கூறப்படுகிறது. அதில் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ள முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெறக்கூடும் என்றும் தெரிகிறது.
எனினும் தேர்தல் தேதி அறிவிக்கும் வரை மட்டுமே, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அமைதியாக இருப்பார்கள். அதன்பின்னரே சசிகலாவை சந்திக்க பலரும் வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சசிகலா தமிழகம் வந்த பிறகு, டி.டி.வி.தினகரன் தான் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் பழிவாங்க வேண்டும் என்று தினகரன் பேசி வருவதை சசிகலா தரப்பு ரசிக்கவில்லையாம். ஏனெனில் இவரின் பழிவாங்குதல் நடவடிக்கையால் அதிமுக வீழ்ந்துவிடக்கூடாது என்பது தான் சசிகலாவின் பிரதான எண்ணம் என்கின்றனர் அவருக்கும் நெருக்கமான வட்டாரங்கள்.
தன்னை சந்திக்க வருவோரிடம் கூட, சசிகலா இதையே தான் கூறி வருகிறாராம். தேர்தலில் அமமுக போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை எனவும், ஆனால் இதன்மூலம் அதிமுக வீழ்ந்துவிடக்கூடாது என்றும் சசிகலா கருதுகிறாராம். ஆனால் தினகரனோ சசிகலாவின் மனநிலைக்கு நேர்மாறாக செயல்பட்டு வருகிறார்.. ஓ.பி.எஸ் –இபிஎஸ் இருவரையும் தோற்கடித்து விட்டால் கட்சியை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடலாம் என்று தினகரன் நினைக்கிறார்.
எனவே தான் சசிகலா எந்த முடிவையும் அறிவிக்காமல் அமைதியாக இருக்கிறாராம்.. மேலும் தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தினகரன் –வெங்கடேஷ் இடையே சொல்லிக்கொள்ளும்படி நல்ல புரிதல் இல்லை. எனவே தினகரனை சசிகலா ஓரங்கட்டுகிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சசிகலா ஒபிஎஸ் – இபிஎஸ்-க்கு எதிரான அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் டி.டி.வி.தினகரனுடன் பனிப்போரில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. இதனால் டிடிவி தினகரன் தரப்பு கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.