அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமாக இருந்தவரும், அவரின் இடது கரமாக அறியப்பட்டவர். அவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் வந்தது. மேலும், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 71,857 டன் நிலக்கரியை காணவில்லை. அங்கேயும் பதிவேட்டில் இருக்கிறது. ஆனால் இருப்பில் இல்லை. எங்கே தவறு ஏற்பட்டது? இந்த தவறு எத்தனை ஆண்டுகளாக நடந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.

அதேபோல்,கிரிப்டோகரென்சியில் முதலீடு செய்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது. அது தொடர்பான விசாரணையில் தங்கமணி 4.68 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி வசித்து வரும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆலம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் திருசெங்கோடு, சென்னை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 69 இடங்களில் சோதனை நடக்கிறது. அதேபோல், ஆந்திராவில் 2 இடங்களிலும் மற்றும் கர்நாடகவில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு முன்னதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வீட்டில் சோதனை நடைபெற்றதை அடுத்து தற்போது அதிமுக முக்கிய பிரமுகராக கருதப்படும் தங்கமணி வீட்டில் சோதனை நடைபெற்று வருவது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.