அதிமுகவா அல்லது பாஜகவா..? மதில் மேல் பூனையாக கராத்தே தியாகராஜன்..!
அதிமுக அல்லது பாஜகவில் இணைவது குறித்து 10 நாட்களில் முடிவு செய்ய இருப்பதாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன், ரஜினிக்கு ஆதரவாகத் தொடர்ந்து கருத்துகளை கூறி வந்தார். எனவே, ரஜினி கட்சித் தொடங்கினால், அதில் அந்தக் கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினி கட்சி தொடங்காமல் போனதால், தன்னுடைய எதிர்கால அரசியல் குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு கராத்தே தியாகராஜன் தள்ளப்பட்டார். அவர் பாஜகவில் சேருவார் என தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் இதுதொடர்பாக ஆலோசித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கராத்தே தியாகராஜன் பேசுகையில், “அதிமுக அல்லது பாஜகவில் இணைவது குறித்து 10 நாட்களில் முடிவு செய்ய உள்ளேன். கொரோனா காலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டார். அடுத்த முதல்வரும் எடப்பாடி பழனிசாமிதான். அரசியலில் நடிகர் ரஜினிகாந்த் குறைந்தபட்சம் கெஸ்ட் ரோல் ஆவது செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.