OPS vs EPS : அதிமுக பொதுக் குழுவில் 23 தீர்மானங்கள்..! ஒப்புதலுக்காக ஓபிஎஸ்யிடம் ஒப்படைத்த அலுவலக நிர்வாகிகள்
அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ள நிலையில், தீர்மானங்களை ஒப்புதல் பெறுவதற்காக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம் அதிமுக அலுவலக நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.
அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள்
ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொதுக்குழுவிற்கு அனுமதி வழங்க கூடாது என காவல்துறை ஆணையருக்கும், நீதிமன்றத்திற்கும் ஓபிஎஸ் தரப்பு சென்றுள்ளது. ஆனால் ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை காவல்துறை நிராகரித்துள்ளது. தனியார் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் காவல்துறை தலையிட முடியாது என கூறியுள்ளது. இதனால் கடைசி அஸ்திரமாக நீதிமன்றத்தை ஓபிஎஸ் தரப்பு நம்பியுள்ளது. இந்தநிலையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை ஒன்றன் பின் ஒன்றாக குறைந்து வருகிறது. ஏற்கனவே 12 மாவட்ட செயலாளர்களில் தற்போது 6 மாவட்ட செயலாளர்களாக குறைந்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஓபிஎஸ் தரப்பு உள்ளது. நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா? அல்லது புறக்கணிக்கலாமா? என ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஓபிஎஸ்சிடம் தீர்மானம் ஒப்படைப்பு
தீர்மானங்கள் இறுதி செய்யாமல் உள்ள நிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்துவது பொருத்தமாக இருக்காது என்றும் கூட்டத்திற்கான பொருள் நிர்ணயம் செய்து கூட்டம் நடத்துவது அவசியமாகிறது என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார். இந்தநிலையில் நாளை அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களை அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம் சமர்பித்துள்ளனர்.பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களுங்கு ஓபிஎஸ் ஒப்புதல் தேவை என்பதால் தற்போது 23 தீர்மானங்களை வழங்கியுள்ளனர். இந்த தீர்மானங்களில் அதிமுக அரசு திட்டங்ளை திமுக அரசு நிறுத்தி வைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தபடி பெட்ரோல், டீசல் விலை குறைக்காதற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்