மஹாராஷ்டிராவில் உருவான ஷிண்டே..! திமுகவில் கனிமொழியா.? துரைமுருகனா.? சி.வி. சண்முகம் பரபரப்பு பேச்சு
டீக்கடையில் வேலை செய்தவரரை சட்டமன்ற உறுப்பினராக்கி, மூன்று முறை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தது அதிமுக என தெரிவித்த சி.விசண்முகம், அப்படிப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தை போலீஸ் பாதுகாப்புடன் அலுவலகத்தை அடித்து உடைத்தது ஓபிஎஸ் என குற்றம்சாட்டினார்.
பலம் வாய்ந்த கட்சியாக அதிமுக
அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பிறந்தாநளையொட்டி பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சி.வி. சண்முகம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், எப்போதெல்லாம் எதிர் கட்சி வரிசையில் அதிமுக அமர்கிறதோ அடுத்து வரும் தேர்தலில் பலம் வாய்ந்த ஆளும் கட்சியாக உருவெடுப்பதாக கூறினார். 1989 லே தோல்வி அடைந்த அதிமுக 91 லே மிகப்பெரிய வெற்றியடைந்தது என கூறினார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அதிமுக, அப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட திமுக பெறாமல் விஜயகாந்தின் அருகாமையில் அமரும் நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.
அதிமுக அலுவலகத்தை உடைத்த ஓபிஎஸ்
உதயநிதி எங்களுக்கு என்னடா இருக்கிறது. அவருடைய அப்பா, தாத்தா கருணாநிதியே பார்த்தவங்க டா நாங்க, இந்தப் பூச்சாண்டி எல்லாம் எங்களிடம் காட்டாதீங்க என கூறினார். உதயநிதி ஸ்டாலினாக இருந்தால் எங்களுக்கு என்ன? யாருடா உதயநிதி ஸ்டாலின், திமுகவிற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் என்னடா சம்பந்தம் என காட்டமாக பேசினார். டீக்கடையில் வேலை செய்தவரை, சட்டமன்ற உறுப்பினராக்கி, மூன்று முறை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தது அதிமுக கட்சித் தொண்டர்கள் என தெரிவித்தார். அப்படிப்பட்ட அதிமுக அலுவலகத்தை போலீஸ் பாதுகாப்புடன் அடித்து உடைத்து சூரையாடுவதற்கு ஓ.பன்னீர் செல்வம் துணை போயிருப்பதாக விமர்சித்தார்.
திமுகவிலும் ஷிண்டே
ஏற்கனவே இந்த இரட்டை இலை சின்னத்தை முடக்கியது இந்த ஓ. பன்னீர்செல்வம் என பேசியவர், தற்போது மீண்டும் சின்னத்தை முடக்குவதற்கு திமுக துணையோடு ஓ. பன்னீர்செல்வம் செயல்படுவதாக கடுமையாக விமர்சித்தார். காலம் நெருங்கி கொண்டிருக்கிறது, அடுத்தது திமுகவிலும் ஒரு ஷிண்டே வருவார். மகாராஷ்டிராவில் ஒரு ஷிண்டே வந்தது போல திமுகலும் ஒரு ஷிண்டே வருவார். அது யார் என்று நாம் சொல்ல முடியாது, ஒரு கனிமொழியாகவும் இருக்கலாம், துரைமுருகனாகவும் இருக்கலாம், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையும் படியுங்கள்
பட்டியலின மக்களின் வீடுகளை அடித்து நொறுக்கி அட்டூழியம்..! தமிழக அரசை அலர்ட் செய்யும் சிபிஎம்