எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும்... ஈபிஎஸ் - ஓபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிக்கை..!
ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் ஒற்றுமையோடு விழிப்புடன் தேர்தல் பணியாற்றி கழகத்திற்கு வெற்றியை ஈட்டி தர வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தெரிவித்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த மாதம் 27-ம் தேதி விடுதலையானார். ஆனால், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், பெங்களூரு மருத்துவமனையிலேயே இருந்தார். சிகிச்சை முடிந்து பிறகு, கர்நாடக அரசின் வழிகாட்டுதல்படி பெங்களூருவில் ஒரு வாரம் சசிகலா தங்கியிருந்து ஓய்வு எடுத்துவருகிறார். நாளை மறுதினம் சசிகலா சென்னைக்கு திரும்ப உள்ளார். சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் பலர் வரவேற்பு போஸ்டர்கள் ஒட்டிவருகிறார்கள். அவர்களை கட்சியைவிட்டு எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் நீக்கிவருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களின் அவரச கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியும் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில், “அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழகத்தில், கழக நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் நிர்வாகிகள் அனைவரும் கழகப் பணிகளை கடமை உணர்வோடு எவ்வாறு ஆற்ற வேண்டும் என்பது குறித்தும், நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலையொட்டி, கழக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளை பிரச்சாரங்கள், துண்டுப் பிரசுரங்கள், விளம்பரங்கள் வாயிலாக பட்டிதொட்டியெங்கும் வாழும் மக்களிடம் விரிவாக கொண்டு சேர்த்து “எனக்குப் பின்னாலும் இன்னம் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் ஒற்றுமையோடு விழிப்புடன் தேர்தல் பணியாற்றி கழகத்திற்கு வெற்றியை ஈட்டுவது குறித்து தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.