ஒரு மிகப்பெரிய எதிர்க்கட்சி தலைவருக்கு மனஉளைச்சல் கொடுக்கும் திமுக... வேதனை ஜெயக்குமார்..!
கொடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. அதிமுகவுக்கு சங்கடங்கள் கொடுப்பதற்காக கொடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்கின்றனர்.
கொடநாடு விவகாரம் சட்டப்பேரவையில் அவசரமாக விவாதிக்க வேண்டிய ஒன்றா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- கொடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. அதிமுகவுக்கு சங்கடங்கள் கொடுப்பதற்காக கொடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்கின்றனர். ஒரு மிகப்பெரிய எதிர்க்கட்சித் தலைவருக்கு மன உளைச்சலைக் கொடுக்க திமுக இவ்விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்கிறது. மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டிய இடம் சட்டப்பேரவை. எத்தனையோ பிரச்சினைகள் இருக்க கொடநாடு பிரச்சனை குறித்து ஏன் விவாதிக்க வேண்டும்.
ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அதை சட்டப்பேரவையில் விவாதிக்கலாமா? நீதிமன்ற அதிகாரத்தை சட்டப்பேரவையோ, சட்டப்பேரவையின் அதிகாரத்தை நீதிமன்றமோ கையில் எடுக்க முடியாது. கொடநாடு விஷயத்தில் அதிமுக பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை.
உரிமை மீறல் என்பதால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பை செய்து அதிமுகவினர் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். மேலும், 55வது விதியின் கீழ் கொடநாடு விவகாரம் குறித்து பேரவையில் விவாதிக்க ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.