சசிகலா தான் அதிமுகவின் பொதுச்செயலாளர்.. மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த டிடிவி.தினகரன்..!
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்பதால்தான் அதிமுக கொடி காரில் பொருத்தப்பட்டது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்பதால்தான் அதிமுக கொடி காரில் பொருத்தப்பட்டது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
கொரோனா பாதிக்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது, அவரது காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவர் அதிமுக கொடியை பயன்படுத்துவதை ஏற்க முடியாது. கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுக கொடியை பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்த எல்லா உரிமையும் உள்ளது. அதில், எந்த சர்ச்சையும் இல்லை. வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்பதால் தான் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது. சட்டப்போராட்டம் தொடரும். அதிமுகவை ஜனநாயகமுறையில் மீட்டெடுக்கவே அமமுக தொடங்கப்பட்டது. அமமுகவை ஆரம்பித்ததே ஜனநாயகமுறையில் தேர்தலில் வென்று அதிமுகவை மீட்டெடுக்கத்தான் என விளக்கமளித்துள்ளார்.
மேலும், பெங்களூர் புறநகர் பகுதியான தேவனஹள்ளி அருகே உள்ள கோடாகுருக்கி பண்ணை வீட்டில் சசிகலா தங்கியுள்ளார். சசிகலாவை ஒரு வாரம் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து, பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழகம் திரும்ப திட்டமிட்டுள்ளார்.