ரூ.3 கோடி பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜியை 8 தனிப்படை போலீசார் 9வது நாளாக தேடிவருகின்றனர்.

ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 3 கோடியே 10 லட்சம் பணம் பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் அவரது உதவியாளர் உள்ளிட்டோரையும் கைது செய்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ராஜேந்திரபாலாஜி பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு , 9 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ராஜேந்திர பாலாஜி தனது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு மீது தங்களது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகளை தமிழக காவல்துறை முடக்கியுள்ளது. ரூபாய் 3 கோடி பணமோசடி செய்த வழக்கில், ராஜேந்திரபாலாஜி பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் அவரின் 6 வங்கி கணக்குகள் தற்போது முடக்கப்பட்டுள்ளது.